
பிரித்தானியாவில் தந்தையால் குத்திக்கொலை செய்யப்பட்ட தனது குழந்தைகள் இருவரையும் ஒரே சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்தார் அவர்களது தாய்.கிழக்கு லண்டனில் ஏப்ரல் 26 அன்று தனது குழந்தைகளான நிகிஷ் (3) மற்றும் ஒன்றரை வயது பவின்யா இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார் நடராஜா நித்தியகுமார் (40).
இந்நிலையில், குழந்தைகளின் தாயான நிஷாந்தனி நித்தியகுமார் (35), தனது குழந்தைகள் இருவரையும் ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்துள்ளார்.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அதிகம் பேர் கலந்துகொள்ள இயலாததால் ஒரு சிறு கூட்டம் நண்பர்கள் உறவினர்களுடன் குழந்தைகளின் இறுதிச்சடங்கு லண்டனில் நடைபெற்றது.
ஆசையுடன் தனது குழந்தைகளின் கன்னங்களை வருடிக்கொடுத்து, அவர்களுக்கு பிடித்த டெடி பியர் பொம்மைகளையும் அவர்களுக்கு அருகில் வைத்து கண்ணீர் மல்க விடைகொடுத்தார் நிஷா.
தன் குழந்தைகள் நினைவாக அவர்களது சிறுவயது முதல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலவற்றை கல்லறைக்கருகில் வைத்தார் நிஷா.

தனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாததால், மக்கள் இந்த புகைப்படங்களைப் பார்த்து தனது துயரத்தை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அந்த புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதாக நிஷா கண்ணீர் மல்க தெரிவித்தார்.