
ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே பொழுதை கழிக்க 16 வயது சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து நாள் முழுவதும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த 16 வயது மாணவன் நண்பர்களுடன் சேர்ந்து நாள் முழுவதும் செல்போனில் பப்ஜி விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் நடத்த நாளன்று மாணவன் நாள் முழுவதும் பப்ஜி விளையாடியதால் மன அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, மாணவனின் பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
மேலும், சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மன நல மருத்துவர்கள் கூறியதாவது, சிறுவர்கள் மொபைல் போனை பயன்படுத்தும் போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர் கவனிக்க வேண்டும். மேலும் பெற்றோர் வீட்டில் இருக்கும் போது குழந்தைகளுடன் தங்களது நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.