
தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை சூறைக்காற்று தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. 2 நாட்களுக்கு முன் இவரது 1 வயது பெண் குழந்தை சுபஸ்ரீயை வீட்டின் மேற்கூரையில் இரும்பு சட்டத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்திருந்தனர். அப்போது திடீரென வீசிய சூறைக்காற்றுக்கு இளையராஜா வீட்டின் மேற்கூரை பறந்து சென்றது.
மேற்கூரையுடன் சேர்ந்து பறந்து சென்ற தொட்டில் சுமார் 100 மீற்றர் தள்ளியிருந்த சோளக்காட்டில் விழுந்துள்ளது. இதற்கிடையில் வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து குழந்தையை தேடியுள்ளனர்.
அழுகை சத்தம் கூட கேட்காத நிலையில் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடியுள்ளனர். அப்போது சோளக்காட்டில் சென்று பார்த்தனர். அங்கு குழந்தை மேற்கூரைக்கு அடியில் கிடந்துள்ளது.
இதைப்பார்த்து பெற்றோர் குழந்தையை மீட்டு வீட்டுக்கு தூக்கி வந்துள்ளனர். இதில் மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் 100 மீற்றர் தொலைவிற்கு பறந்து சென்று குழந்தைக்கு எந்தவொரு அடியும் இல்லாமல் பத்திரமாக இருந்துள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.